ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். நெல்சன் திலீப் குமார் டைரக்டு செய்கிறார். 65 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயிலர் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் வில்லனாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்கின்றனர். ரஜினியின் 'படையப்பா' படத்தில் நீலாம்பரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த ரம்யா கிருஷ்ணனும் 'ஜெயிலர்' படத்தில் இணைந்துள்ளார்.
இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக மலையாள இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் ஓரிரு தினங்களில் படமாக்கப்பட உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் படக்குழுவினர் தரப்பில் இருந்து இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. முதல் தடவையாக ரஜினியும், மோகன்லாலும் இணைந்து நடிப்பதாக வெளியான தகவல் அவர்களின் ரசிகர் களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மோகன்லால் ஏற்கனவே கமல்ஹாசனுடன் 'உன்னைப்போல் ஒருவன்' படத்தில் நடித்து இருக்கிறார். விஜய்யுடன் ஜில்லா, சூர்யாவுடன் காப்பான் படங்களிலும் நடித்துள்ளார்.
Tags
Cinema News
