கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் நீராட்டுபுரம் பகுதியை சேர்ந்தவர் மேத்யூஸ் முலக்கல் (வயது40). இவரது மனைவி லினி ஆபிரகாம் (38). இவர்களது குழந்தைகள் இரின் (14), இசாக் (9). மேத்யூஸ் மற்றும் அவரது மனைவி குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்தனர்.
இதனால் மேத்யூஸ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குவைத் அம்பாசியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். மேத்யூஸ் ராய்ட்டர்சில் உள்ள நிறுவனத்திலும், அவரது மனைவி லினி அல் அஹ்மதி கவர்னரேட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நர்சாகவும் பணியாற்றினர்.
அவர்களது குழந்தைகள் குவைத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். விடுமுறை கிடைக்கும் போது கேரளாவில் உள்ள சொந்த ஊருக்கு மேத்யூஸ் தனது குடும்பத்தினருடன் வந்து செல்வது வழக்கம். அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு குடும்பத்துடன் வந்திருக்கிறார்.
பின்பு விடுமுறை முடிந்ததையடுத்து குவைத்துக்கு திரும்பினர். மேத்யூஸ், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் நேற்று (19) மாலை 4 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தங்களது வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள். பின்பு 4 பேரும் வீட்டில் உள்ள படுக்கையறையில் படுத்து தூங்கியிருக்கின்றனர்.
அப்போது இரவில் அவர்களது வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்த அவர்கள், அறை முழுவதும் புகைமூட்டமான பிறகே எழுந்துள்ளனர். ஆனால் அறை முழுவதும் புகையாக இருந்ததால் அவர்களால் வெளியே வர முடியவில்லை.
இதனால் மேத்யூஸ், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்பட 4 பேரும் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர். இந்த தீவிபத்து குறித்து தகவலறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஏ.சி.யில் ஏற்பட்ட பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொந்த ஊருக்கு வந்திருந்த மேத்யூஸ் மறறும் அவரது குடும்பத்தினர், நேற்று மாலை 4 மணிக்கு தான் குவைத்துக்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் இரவு 8 மணிக்கு தனது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேரும் பலியாகினர்.
சொந்த ஊரிலிருந்து குவைத்துக்கு திரும்பிய 4 மணி நேரத்திலேய அவர்கள் பலியாகி விட்டனர். இது கேரளாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
